ஷா ஆலம், அக் 12- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனை வரும் சனிக்கிழமை செகி ஃப்ரெஷ் பேராங்காடிகளின் நான்கு
கிளைகளில் நடத்தப்படும்.
சவுஜானா உத்தாமா, சுங்கை பெசார், பத்தாங் காலி, பூலாவ் இண்டா
ஆகிய நான்கு செகி ஃபிரெஷ் பேரங்காடி கிளைகளில் இந்த மலிவு
விற்பனை நடைபெறவுள்ளது.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும்
மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை
அமல்படுத்தியுள்ளோம் என செகி ஃப்ரெஷ் நிறுவனம் தனது பேஸ்புக்
பதிவில் கூறியது.
மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ்.
மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம்
செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த
மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.
சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை
செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக்
கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி
ஃப்ரேஷ் பேரங்காடி கூறியது.
இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட்
முட்டை 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் ஒரு
பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.








