கிள்ளான், அக் 12- மேரு தொகுதியில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண குறுகிய காலத் திட்டத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னெடுத்துள்ளார்.
தொகுதியில் குறிப்பாக, வெள்ள அபாயம் உள்ள தாமான் டத்தோ பண்டார் குடியிருப்பு பகுதியில் கால்வாய்களை முறையாக பராமரிப்பதும் அந்த திட்டங்களில் அடங்கும் என்று மரியாம் அப்துல் ரஷிட் கூறினார்.
வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறேன். கடந்த வாரம் கூட சம்பந்தப்பட்ட துறையினருடன் சந்திப்பு நடத்தினேன். குறுகிய காலத் திட்டங்கள் வாயிலாக வெள்ளப் பிரச்சனைக்கு விரிவானத் தீர்வைக் காண்பதற்கு அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
பல கால்வாய்கள் மரங்களால் சூழப்பட்டு நீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, முக்கியத்துவம் அளிக்க வேண்டிய வெள்ள அபாயம் உள்ள இடங்களை நாங்கள் இப்போது பட்டியலிட்டு வருகிறோம். அடுத்தக் கட்ட நடவடிக்கைகாக இந்தப் பட்டியல் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
வெள்ளத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நான்கு வெள்ள நீர் சேகரிப்பு குளங்களின் நிர்மாணிப்பு குறித்து கருத்துரைத்த அவர், அப்பணிக்கு குத்தகையாளரை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு தனியார் நிலங்களைக் கையகப் படுத்துது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த வெள்ள நீர் சேகரிப்பு குளங்கள் அமைக்கப் பட்டவுடன் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.








