கிள்ளான், அக் 12- தற்போதைய வடகிழக்கு பருவநிலை மாற்ற காலத்தில்
அடிக்கடி வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள 97 இடங்களை சிலாங்கூர்
மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.
கிள்ளானில் இந்த பாதிப்பை எதிர்நோக்கும் சாத்தியம் உள்ள 23 இடங்கள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிப்பாங் மற்றும் உலு
லங்காட்டில் 19 இடங்களும் கோம்பாக்கில் 13 இடங்களும் பெட்டாலிங்கில்
11 இடங்களும் கோல லங்காட்டில் 5 இடங்களும் கோல சிலாங்கூரில் 4
இடங்களும் சபாக் பெர்ணமில் இரண்டு இடங்களும் உலு சிலாங்கூரில்
ஒரு இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பேரிடர்
மேலாண்மைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி
கூறினார்.
மாநிலம் முழுவதும் வெள்ள அபாயம் நிறைந்த 390 இடங்கள் அடையாளம்
காணப்பட்டாலும் 97 இடங்கள் மீது மட்டுமே அதிக கவனம்
செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதோடு சம்பந்தப்பட்ட
பகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு தொகுதி சட்டமன்ற
உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டத் துறைகளிடமிருந்து பேரிடர் மேலாண்மைக் குழு
தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருகிறது. ஊராட்சி மன்ற நிலையிலும்
முழுமையாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. தற்போதைய
முன்னேற்பாடுகள் சிறப்பானதாக உள்ள வேளையில் வெள்ளப்
பிரச்சனையை ஆக்ககரமான முறையில் கையாள முடியும் எனவும்
நம்புகிறோம் என அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில தேசிய பாதுகாப்பு மன்றம், கோலக் கிள்ளான் துறைமுக
வாரியம், நோர்த் போர்ட் மற்றும் வெஸ்ட் போர்ட் ஏற்பாட்டில் நேற்று
இங்கு நடைபெற்ற சமூக நல பயிற்சித் திட்டத்தை தொடக்கி வைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.








