ஷா ஆலாம், அக் 10: கோலா லங்காட் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல கடற்கரைகளில் ஏற்படும் அதிக அலைகளால் கடல் அரிப்பை தடுத்து அணை உருவாக்குதல், மேம்படுத்துதல் மற்றும் அரிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திட்டத்தில் RM47.7 மில்லியன் மதிப்பீட்டில் கெலனாங் கடற்கரை, மோரிப் கடற்கரை, சுனாங் கடற்கரை, தஞ்சோங் சிபாட் கடற்கரை மற்றும் கேரி தீவு கடற்கரை ஆகியவை அடங்கும் என்று இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார்.
"இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தும், அதற்கு இம்மாதம் டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதன் பணிகள் 2024இன் தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மேலும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கோலா லங்காட் பகுதியில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் 55,000 குடியிருப்பாளர்களை வெள்ளம் அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்காக அணையை உருவாக்கி மேம்படுத்துவதாகும்,'' என்றார்.
இன்று டேவான் ராக்யாட்டில் இது தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க புதிய வழிமுறைகளை பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் பற்றி அறிய விரும்பிய கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் யூனுஸ் ஹைரியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சதுப்புநில மரங்கள் போன்ற கடலோரச் செடிகளை நடுவது கடற்கரையை வலுப்படுத்துவதற்கும் அரிப்பைக் குறைப்பதற்கும் ஒரு வழி என்று நிக் நஸ்மி கூறினார்.
"செப்டம்பர் 15 நிலவரப்படி, நாடு முழுவதும் 3,300 ஹெக்டேர் கடலோரப் பகுதிகளில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான சதுப்புநில மரங்கள் மற்றும் பொருத்தமான கடலோர செடிகள் நடப்பட்டுள்ளன, இது பசுமை உள்கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
"சிலாங்கூரில் மட்டும் கிட்டத்தட்ட 210 ஹெக்டேர் மற்றும் 500,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன," என்று அவர் கூறினார்.
ஒருங்கிணைக்கப்பட்ட கரையோர மேலாண்மைத் திட்டத்தையும் (ISMP) அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது, இது நீண்ட கால கட்டமைப்பு சாராத நடவடிக்கையாகும், இது கரையோரத்தில் உள்ள உள்ளூர் காரணிகளைக் கருத்தில் கொண்டு அரிப்பைத் தொடர்ந்து கட்டுப்படுத்தவும், கடலோர வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.








