பந்திங், அக் 10- மாநில அரசின் வளர்ச்சிக்கு ஊராட்சி மன்ற
உறுப்பினர்களின் பங்களிப்பு ஊக்கமூட்டும் வகையில் உள்ளதாக பந்திங்
சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
மத்திய அரசுக்கு பிரதமரும் மாநில அரசுக்கு மந்திரி பெசாரும்
பொறுப்பேற்றிருந்தாலும் மாவட்ட மன்றம், நகராண்மைக் கழகம் மற்றும்
மாநகர் மன்றங்களின் மேம்பாட்டிற்கு அதன் உறுப்பினர்கள் அளப்பரிய
பங்கினை ஆற்றி வருகின்றனர் என்று மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
சுங்கை சீடு சமூக நலனபிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்த விருந்து
நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு
சொன்னார்.
ஊராட்சி மன்றங்களில் இடம் பெற்றுள்ள கவுன்சிலர்கள் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றப்
பகுதியில் கால்வாய், சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதித்
திட்டங்கள் முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வளர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உரிய பங்கினை வழங்க வேண்டும்
என்றார்.
இதனிடையே, கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வசம் வீழ்ந்த கோல
லங்காட் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிஜங்காங், மோரிப் சட்டமன்றத்
தொகுதிகளை மீட்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்
பாப்பாராய்டு சொன்னார்.
இந்நோக்கத்தின் அடிப்படையில் இத்தொகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
இந்த விருந்து நிகழ்வில் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சோங்,
நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உள்பட
திரளானோர் கலந்து கொண்டனர்.








