ஷா ஆலம், அக்.10: தீபாவளியை முன்னிட்டு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களின் ஒதுக்கீட்டை இந்த ஆண்டு உயர்த்தி அப்பகுதி இந்துக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என பாலகோங் பிரதிநிதி கோரிக்கை விடுத்தார்.
அப்பகுதியில் உள்ள மக்களில் 7,000 முதல் 8,000 பேர் வரை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட இந்தியர்கள் ஆவர் என்று ஓங் சுன் வெய் கூறினார்.
"இந்த ஷாப்பிங் வவுச்சருக்கான விண்ணப்பம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற த் தொடங்கினோம். வவுச்சர் ஒதுக்கீடு குறித்த இந்த புதன்கிழமை விவாதிக்கப்படும் என்பதால் முதலில் அவற்றைப் பதிவு செய்கிறோம்.
"இருப்பினும், முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 400 முதல் 500 வவுச்சர்களை விட இம்முறை அதிக ஒதுக்கீடு இருக்கும் என்று நான் நம்புகிறேன். முடிந்தவரை அதிகமான இந்தியர்கள் பலனடைவதை காண விரும்புகிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் வகையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, RM200 மதிப்புள்ள வவுச்சர்கள் மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
"இப்போது தவிர்க்க முடியாத உலகளாவிய லிலைவாசி பிரச்சனைகளால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சிலாங்கூர் அரசாங்கம் இதை அறிந்திருக்கிறது, அதனால் தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2023 லில் ஜோம் ஷாப்பிங் வவுச்சர் திட்டத்திற்காக RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இது 82,400 பெறுநர்களுக்கு பயனளிக்கும்.
பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் தேவைகளை அடுத்து வவுச்சரின் மதிப்பு RM100இல் இருந்து RM200 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.








