ஷா ஆலம், அக் 10- மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு
ஏதுவாக கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள இதர பொது போக்குவரத்து
சேவைகளுடன் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை
ஒருங்கிணைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்
அளிக்கும் வகையில் ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் தடங்களை மறுசீரமைப்புச்
செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று முதலீடு மற்றும் வர்த்தக
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர இங் ஸீ ஹான் கூறினார்.
இவ்வாண்டில் அமல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள சிலாங்கூர்
டி.ஆர்.டி. வேன் சேவை, பாதசாரிகளுக்கு நட்புறவான நடைபாதைகள், இ-
ஸ்கூட்டர் மற்றும் மின்சார சைக்கிள் போன்ற திட்டங்களும் இதில்
அடங்கும் என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் நகர்வு நிலைக்குழுவின் கூட்டத்தில்
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் தடங்களை மறுஆய்வு செய்வது தொடர்பான
முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
ப்ராசாரானா பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக சிறப்பான
ஒருங்கிணைந்த பஸ் சேவையை அமல்படுத்துவது தொடர்பில்
போக்குவரத்து அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்கேற்ப
இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் தற்போது அமல்படுத்தி வரும்
திட்டங்களின் வாயிலாக வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் சிலாங்கூர்
மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களின் பிரதான பயணத் தேர்வாக
பொது போக்குவரத்து முறை அமையும் என்றும் அவர் நம்பிக்கைத்
தெரிவித்தார்.
வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் 60 விழுக்காட்டு மக்கள் பொது
போக்குவரத்தைப் பயன்டுத்துவதை மாநில அரசின் பொது பொது
போக்குவரத்து பெருந்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர்
சொன்னார்.








