ஷா ஆலம், அக் 10- தங்களின் வர்த்தக வளாகங்கள் எப்போதும்
தூய்மையுடன் இருப்பதை உறுதி செய்யும்படி உணவகங்கள் மற்றும்
உணவு விற்னையாளர்களை பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர்
வலியுறுத்தியுள்ளார்.
ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ளபடி எண்ணெய் கால்வாய்களில்
கலப்பதை தடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று ஓங் சுன்
வேய் கூறினார்.
ஊராட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் சோத்னையின் போது சம்மன்கள்
அல்லது நினைவூட்டல் கடிதங்கள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்கு
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உணவகங்கள் எடுப்பது
அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
வர்த்தக லைசென்ஸ் பெறுவதற்கான நிபந்தனைகளில் எண்ணெய் தடுப்பு
சாதனங்களைப் பொருத்துவதும் ஒன்றாகும். ஆகவே, காஜாங்
நகராண்மைக் கழகத்தின் இந்த நிபந்தனையை பின்பற்றி நடக்கும்படி
உணவக உரிமையாளர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றார் அவர்.
இம்மாதம் 3ஆம் தேதி காஜாங், தாமான் பெர்ஜெயா மற்றும் கம்போங்
பாரு சுங்கை சுவா ஆகிய பகுதிகளுக்கு தாம் மேற்கொண்ட வருகையின்
போது உணவுக் கழிவுகள் மற்றும் எண்ணெய்க் கசடுகளால் கால்வாய்கள்
அடைபட்டுள்ளதைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.
எண்ணெய் தடுப்புகளைப் பொருத்தாத அருகிலுள்ள உணவகங்களிலிருந்து
வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் மழையின் போது பெருக்கெடுத்து
துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்
தொடர்ச்சியாக கால்வாய்களைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு
வந்த போதிலும் தூய்மையைப் பராமரிப்பதில் பொது மக்களும் தங்களின்
பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.








