ஷா ஆலம், அக் 10- சுங்கை சிலாங்கூர் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட
டீசல் போன்ற துர்நாற்றப் பிரச்சனைக்கு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்
(லுவாஸ்) மற்றும் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் அதிகாரிகளின் துரித
நடவடிக்கையால் வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டது.
இந்த துர்நாற்றத்திற்கான மூலத்தைக் கண்டறிய லுவாஸ் மேம்பாட்டுப்
பகுதிகள் மீது சோதனை மேற்கொண்டதில் எந்தவொரு எண்ணெய் கசிவு
அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று சுற்றுச்சூழல் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு அருகே நேற்றிரவு 11.15
மணியளவில் இந்த சம்பவம் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர்,
எண்ணெய் கசிவு குறைவான அளவில் இருந்துள்ளதால் சுங்கை
சிலாங்கூர் ஆற்றுக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று
சொன்னார்.
இந்த நீர் மாசுபாடு பிரச்சனையைத் தொடர்ந்து லுவாஸ் மற்றும் ஆயர்
சிலாங்கூர் நிறுவனங்கள் துரித நடவடிக்கை மேற்கொண்தோடு மாற்றுக்
குளங்களிலிருந்து நீரை ஆற்றில் கலக்கும் நடவடிக்கையையும்
மேற்கொண்டன என்றார் அவர்.
ஆற்று நீரிலிருந்து துர்நாற்றத்தை போக்குவதற்காக ஹோராஸ் எனப்படும்
ஆற்றுக் கரையோர ஹைப்ரிட் திட்டத்திலிருந்து 30 கோடி லிட்டர் நீரையும்
பெஸ்தாரி ஜெயா மாற்றுக் குளங்களிலிருந்து 29 கோடி லிட்டர் நீரையும்
சிலாங்கூர் ஆற்றில் தாங்கள் கலக்கவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான தரப்பிரைக் கண்டறியும் முயற்சியில்
தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் குற்றமிழைத்தவர்கள் மீது
2020ஆம் ஆண்டு (திருத்தப்பட்ட) லுவாஸ் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








