ஷா ஆலம் அக் 10- சுங்கை சிலாங்கூர் ஆற்று நீரில் துர்நாற்றம் கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்ட சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் கட்ட, இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட ஆலைகளும் ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையமும் இன்று அதிகாலை 4.00 மணி தொடங்கி மீண்டும் செயல்படத் தொடங்கின.
இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட இடையூறுகள் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாமலிருப்பதை தாங்கள் உறுதி செய்து வருவதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி இஞ்சினியர் அப்பாஸ் அப்துல்லா கூறினார்.
அந்த நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களும் செயல்படத் தொடங்கி விட்டன. எனினும் குறைந்த நீர் அழுத்தம் காரணமாக ஷா ஆலம், பெட்டாலிங், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் ஆகிய இடங்களில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்படும் பகுதிகள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது பொது மக்களுக்கு வெளியிடப்படும். முக்கிய இடங்களுக்கு முன்னுரிமை அளித்து லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.
நீர் விநியோகத் தடை தொடர்பான ஆகக் கடைசித் தகவல்கள் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பேஸ்புக், இண்ட்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக ஊடகங்கள் வாயிலாகவும் 15300 என்ற எண்கள் மூலமாகவும் பொது மக்கள் அறிந்து கொள்ளலாம் என்றார் அவர்.








