ஷா ஆலம், அக் 9- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் இந்திய சிறுதொழில் வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் ஐ-பெர்மூசிம் எனப்படும் விழாக்கால கடனுதவித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 20,000 வெள்ளி வரை கடனுதவி வழங்கப்படும் என்று ஹிஜாரா அறவாரியத்தின இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி நோர்மைசா யாஹ்யா கூறினார்.
தீபாவளியின் போது வீட்டிலிருந்து அல்லது தீபாவளி சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்காக இந்த கடனுதவித் திட்டம் விஷேசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பெருநாள் காலத்தின்போது வியாபாரத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுவோரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு இத்திட்டத்தை அமல் படுத்தியுள்ளது என்றார் அவர்.
இந்த ஐ-பெர்மூசிம் திட்டத்தின் கீழ் பெறுவோர் சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது பத்தாண்டுகளுக்கும் மேல் மாநிலத்தில் வசிப்பவர்களாக இருப்பது அவசியம். கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் 25 வாரங்கள் அல்லது ஆறு மாதங்களாகும்.
இந்த கடனுதவித் திட்டத்திற்கு இணையம் வாயிலாக அல்லது அருகிலுள்ள ஹிஜ்ரா கிளைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.








