ஷா ஆலம், அக் 6- இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் 2023
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக கண்காட்சியில் (சிப்ஸ்)
வருகையாளர்களை பெரிதும் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக சிலாங்கூர்
தொழிலியல் பூங்கா கண்காட்சி (ஸ்பார்க்) அமையும்.
இந்த பிராந்தியத்தின் பிரதான நிகழ்வாக விளங்கும் இந்த மாநாட்டில்
பங்கேற்பதற்கு தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள்
உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து முன்கூட்டியே விண்ணப்பங்கள்
வந்துள்ளதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை செயல் முறை அதிகாரி
டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் கூறினார்.
இந்த ஸ்பார்க் கண்காட்சி கடந்த 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட
வேளையில் அதில் உள்நாட்டினருக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.
அதிகமானோர் ஆர்வம் காட்டும் காரணத்தால் தற்போது அது
வெளிநாட்டினருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கண்காட்சியில் இம்முறை அனைத்து மாநிலங்களோடு தாய்லாந்து,
வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய தென்கிழக்காசிய
நாடுகளும் பங்கேற்கின்றன. கண்காட்சிக்கு மட்டும் இம்முறை இரு
மண்டபங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை கோலாலம்பூர்
மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் 50,000 பேர் வரை
கலந்து கொள்வர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
இந்த மாநாட்டின் மூலம் 150 கோடி வெள்ளி மதிப்புள்ள வர்த்தக
வாய்ப்புகளை பதிவு செய்ய முடியும் என இன்வெஸ்ட் சிலாங்கூர்
நம்புகிறது. ஸ்பார்க் கண்காட்சி தவிர்த்து உணவு மற்றும் பான
கண்காட்சியும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும் என நம்புகிறோம்
என்று அவர் கூறினார்.








