ஷா ஆலம், அக் 6- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப்
பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த தரப்பினருக்கு உதவும் நோக்கில்
தாமான் டெம்ப்ளர் தொகுதி 50 அத்தியாவசிய உணவுப் பொருள்
பொட்டலங்களை விநியோகித்தது.
பெருநாள் காலத்தில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச்
சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டத்தை தாங்கள்
அமல்படுத்துவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்ஃபால் சாஹ்ரி
கூறினார்.
பங்சாபுரி நுரி, புக்கிட் இடாமான், ஜாலான் 49, செலாயாங் பாரு மற்றும்
தொகுதி சேவை மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வசதி
குறைந்தவர்களுக்கு இந்த உதவி நல்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த உதவி, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சுமையை ஓரளவு குறைக்க
உதவும் என நாங்கள் நம்புகிறோம். இந்த திட்டத்தின் வெற்றிக்கு துணை
புரந்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி என அவர் தனது பேஸ்புக்
பதிவில் தெரிவித்தார்.
சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வோம். ஆதரவுக்
கரங்களை தொடர்ந்து நீட்டுவோம், அன்பைப் பகிர்ந்து கொள்வோம் என
அப்பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உணவுப் பொருள் விநியோக நிகழ்வில் இந்திய சமூகத் தலைவர்
டத்தோ சுரேஷ் ராவுடன் நகராண்மைக் கழக உறுப்பினர்களான வான்
அன்வார் வான் இப்ராஹிம் மற்றும் அகமது ஜாஹிரி ஆகியோரும் கலந்து
கொண்டனர்.








