ஷா ஆலம், அக் 5- லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் வரும் ஆக்டோபர்
10ஆம் தேதி பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்தும் பணிகள்
மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் நீர் விநியோகப் பாதிப்பை
எதிர்நோக்கவிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போதுமான அளவு
நீரை சேமித்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பழுதுபார்ப்பு மற்றும் தரம் உயர்த்தும் பணிகளுக்காக சுங்கை லங்காட் நீர்
சுத்திகரிப்பு மையம் 10ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மூடப்படவுள்ளதால்
அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அடிப்படை
வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த பணிகளால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள்
தங்களுக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்
கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று தனது பேஸ்புக் பதிவில்
அவர் சொன்னார்.
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பழுதுபார்ப்பு மற்றும்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பெட்டாலிங்
கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்
தடை ஏற்படும் என்று பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்
நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் அன்றைய தினம் இரவு 7.00
மணிக்கு முற்றுப் பெறும் என்றும் நீர் விநியோகம் வரும் 12ஆம் தேதி
வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் முழுமையாக சீரடையும்
என்றும் அது தெரிவித்திருந்தது.
குடியிருப்பாளர்களின் இருப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் நீர்
விநியோக முறையில் காணப்படும் அழுத்தம் ஆகியவற்றின்
அடிப்படையில் நீர் விநியோகம் சீரடையும் நேரம் மாறுபடும் எனவும் அது
குறிப்பிட்டிருந்தது.








