ஷா ஆலம், அக் 4- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் அத்தியாவசியப் பொருள்
மலிவு விற்பனை வரும் சனிக்கிழமை தொடங்கி செகி ஃப்ரெஷ்
பேராங்காடிகளின் நான்கு கிளைகளில் வாரந்தோறும் நடத்தப்படும்.
சுபாங், கம்போங் காயு ஆரா, காஜாங், பண்டார் டெக்னோலோஜி, சுங்கை
ஊடாங் ஆகிய இடங்களில் இவ்வாரம் சனிக்கிழமை இந்த விற்பனை
நடைபெறவுள்ள வேளையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பத்து
கேவ்ஸ், ஜாலான் கெபுன், பண்டார் தாசேக் புத்ரி, ஜெர்னாங் ஜெயா ஆகிய
இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவு படுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ்.
மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம்
செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த
மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.
சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை
செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக்
கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் செகி
ஃப்ரேஷ் பேரங்காடி தனது பேஸ்பு பதிவில் கூறியது.
வரும் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி சிறப்பான மற்றும் கட்டுபடி
விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குரிய
வாய்ப்பினைப் பயன்டுத்திக் கொள்ளுங்கள் என்று அந்த பதிவில்
குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் தெலுக் பங்ளிமா காராங் செகி ஃபிரெஷ் பேரங்காடியில்
நடைபெற்ற மலிவு விற்பனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா
மூடா தெங்கு அமீர் ஷா பார்வையிட்டார்.








