ஷா ஆலம், செப் 26 - முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) சமூக உள்ளடக்கம் மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான மூலோபாய திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் குடும்ப நலக் குறியீட்டை (IKK) எட்டாக உயர்த்தும்.
இந்த மதிப்பெண்ணை மேம்படுத்த எதிர்கால திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன என்று பெண்கள் அதிகாரம் மற்றும் நலனுக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
"குடும்ப அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மாநில அரசு உணர்ந்துள்ளது. எனவே RS-1 2025 ஆம் ஆண்டுக்குள் 8 என்ற மதிப்பெண்களை பெறுவதற்கான ஒரு மூலோபாய திட்டத்தை அமைத்துள்ளது," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
குடும்ப நலக் (2019) குறியீட்டின் அறிக்கையின் அடிப்படையில், சிலாங்கூர் 7.68 மதிப்பெண்களுடன் 17ல் (மூன்று கூட்டாட்சிப் பிரதேசங்கள் உட்பட) தேசிய அளவில் 13வது இடத்தில் உள்ளது என்றார்.
தற்போதைய காலக் கட்டத்தில் பெற்றொர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதில்லை. மேலும், நிதிச் சிக்கல்கள் மற்றும் போதிய சேமிப்பின்மை ஆகியவைகளும் குறைந்த மதிப்பெண்ணுக்கான முக்கிய காரணிகளாக இருப்பதாக அன்ஃபால் கூறினார்.
"இது அவர்களின் மன ஆரோக்கியம், வாழ்க்கைத் தரம் மற்றும் குடும்பங்களின் நல்வாழ்வை பாதிக்கிறது," என்று அவர் கூறினார்.








