ஷா ஆலம், செப் 26- பல்வேறு துறைகளில் கொண்டுள்ள ஆற்றல்களைக்
கொண்டு தென்கிழக்காசியாவின் நுழைவாயிலாக ஆகும் இலக்கை
சிலாங்கூர் அடைய முடியும் என்று மந்திரி புசார் டத்தேஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொது போக்குவரத்து தொடர்பு
முறை மற்றும் அதிவே இணைய வசதி போன்றவை மாநிலத்தின்
பலங்களாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.
நகரமயம், கட்டுபடி விலையிலான வீடுகள், சேவை மற்றும் உற்பத்தித்
துறை சார்ந்த வர்த்தக பிரதேசங்கள் மற்றும் துணைத் தொழில்துறை
ஆகியவை மாநிலத்தின் இதர கூடுதல் அனுகூலங்களாக திகழ்கின்றன
என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.5 விழுக்காட்டு
பங்களிப்பை சிலாங்கூர் வழங்குவதற்கு இந்த அனுகூலங்கள் துணை
புரிந்தன என்று எக்ஸ் இணையத்தளத்தில் அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் அமிருடின், அங்குள்ள
பாராமர்டினா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது இவ்வாறு
குறிப்பிட்டார்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் மனித மூலதன மேம்பாட்டில் ஒத்துழைப்பை
நல்குவது தொடர்பில் அந்த பல்கலைக்கழகத்திற்கும் யுனிசெல்
பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்திடும் சடங்கையும் அவர் பார்வையிட்டார்.








