ஷா ஆலம், செப் 25- பாங்கியிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி
குடியிருப்பிலுள்ள நீச்சல் குளத்தில் சிறுமி ஒருவர் மூழ்கியது தொடர்பான
விசாரணைக்கு உதவுவதற்காக இளைஞர் ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
அந்த சிறுமி நீரில் மூழ்கிய போது சம்பவ இடத்தில் இருந்த அவரின்
வளர்ப்புச் சகோதரரான அந்த இளைஞர் சிறுமிக்கு உதவி செய்யாமல்
வேடிக்கை பார்த்ததாக நம்பப்படுகிறது என்று காஜாங் மாவட்ட போலீஸ்
தலைவர் எசிபி முகமது ஜைட் ஹசான் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டி.வி.) பதிவான
காட்சிகளை ஆய்வு செய்தப் பின்னர் 26 வயதான அந்த இளைஞரை
தாங்கள் கைது செய்ததாக அவர் சொன்னார்.
தன் சகோதரி நீரில் மூழ்கும் போது அவரைத காப்பாற்றுவதற்கான எந்த
முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர் உயிருக்குப் போராடும் காட்சியை
வெறுமனே பார்த்தவாறு அவ்விளைஞர் வேறு வேலைகளில் கவனம்
செலுத்திக் கொண்டிருந்தது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது என
குறிப்பிட்டார்.
இம்மாதம் 13ஆம் தேதி சுயநினைவற்ற நிலையில் அந்த சிறுமி
சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது தொடர்பில் செர்டாங்
மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து தாங்கள் புகாரைப்
பெற்றதாக அவர் தெரிவித்தார்.
நான்கு வயதான அச்சிறுமி சிகிச்சைப் பலனின்றி கடந்த 14ஆம் தேதி
பிற்பகல் 1.00 மணியளவில் உயிரிழந்ததாகக் கூறிய அவர், தொடக்கத்தில்
இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டிருந்தது என்றார்.
எனினும், தற்போது இச்சம்பவம் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின்
31(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.








