காஜாங், செப் 21: கனமழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவரும் பருவமழையின் இடைக்கால கட்டத்தில் சிலாங்கூர் மாநில மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிகாரிகள் வழங்கும் வானிலை எச்சரிக்கைகள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை பொறுப்பு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி நினைவூட்டினார்.
"தற்போது பருவமழை காலம் என்பதால் சிலாங்கூரில் எல்லா இடங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"எனவே சிலாங்கூர் மக்கள் எப்பொழுதும் விழிப்புடனும், தேவையற்ற விஷயங்களைத் தவிர்க்கவும், கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் பெரானாங்கில் உள்ள சுராவ் தெங்கா கம்போங் செசபான் பத்து ரெம்பாவின் தற்காலிகத் தங்கும் மையத்தில் தஞ்சமடைந்துள்ள புயலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு கூறினார்.
பேரிடர் மேலாண்மைப் பிரிவு மூலம் மாநில அரசும் எதிர்பாராதப் பேரழிவை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
"மாநில அரசு அளவில், வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரழிவுகள் ஏற்பட்டால் நாங்கள் உண்மையில் தயார் நிலையில் இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
பருவமழை மாற்றத்தின் போது நாட்டின் பிராந்தியம் பல்வேறு திசைகளில் இருந்து பலவீனமான காற்றைப் பெறும். இந்நிலை இடியுடன் கூடிய மழைக்கு உகந்தது. அதுமட்டுமில்லாமல், பொதுவாகக் குறுகிய காலத்தில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டு வரும்.








