உலு லங்காட், செப் 20- புயல் காரணமாக பெரானாங் வட்டாரத்தின் ஐந்து
இடங்களில் சேதமுற்ற வீடுகளைச் மறுசீரமைப்பதில் சம்பந்தப்பட்ட
குடியிருப்பாளர்களுக்கு மாநில அரசு உதவும்.
இதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அங்கீகாரம் பெறுவதற்காக இவ்விவகாரம்
விரைவில் மாநில ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்
என்று பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான்
ஹலிமி கூறினார்.
இந்த பேரிடரில் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து உலு லங்காட்
மாவட்ட மற்றும் நில அலுவலகம் கணக்கெடுப்பை நடத்தி வருவதாகவும்
இதன் தொடர்பான விரிவான அறிக்கை இன்னும் மூன்று தினங்களில்
தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
சில வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ள வேளையில் சில வீடுகளில்
மரங்கள் விழுந்து கூரைகள் பெயர்ந்துள்ளன. ஆகவே, பழுதுபார்ப்பு
பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் சேதங்களை மதிப்பிட
விரும்புகிறோம் என்று அவர் விளக்கினார்.
முன்னதாகப் பெரானாங், கம்போங் செசாப்பான் பத்து ரெம்பாவ் சூராவில்
தங்கியிருக்கும் புயலால் பாதிக்கப்பட்டவர்களை முகமது நஜ்வானும் சமூக
நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சஹாரியும் நேரில்
சென்று கண்டனர்.
எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் வர்த்தக சமூக பொறுப்பு
மற்றும் தொடர்பு பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோரும்
பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். இந்த தற்காலிக நிவாரண மையத்தில்
10 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் தங்கியுள்ளனர்.








