ஷா ஆலம், செப் 20- தலைநகரில் அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணி
தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக மூன்று நபர்களை போலீசார்
தேடி வருகின்றனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அந்த மூவரையும் தொடர்பு
கொள்ள இதுவரை தாங்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை
என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல்
மஜிட் கூறினார்.
அந்தப் பேரணியில் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 28
பேரில் 16 பேரிடம் வாக்குமூலம் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள
நிலையில் தேடப்படும் மூவர் உள்பட மற்றவர்களின் வாக்குமூலம்
விரைவில் பதிவு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
அம்மூவரையும் தொடர்பு கொள்வதற்கான முயற்சி தோல்வி கண்டால்
அவர்கள் பெயர் மற்றும் படங்கள் விரைவில் வெளியிடப்படும் எனக்
கூறிய அவர், இந்த பேரணி தொடர்பான விசாரணை அறிக்கை
இவ்வாரத்திற்குள் தயாராகி விடும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும்
சொன்னார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாநில
காவல் துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் கடந்த
சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் விதிகளை
பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய
டத்தோ அலாவுடின், இவ்வாண்டில் முதல் எட்டு மாதங்களில் கோலாலம்பூரில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 10.3 விழுக்காடு அல்லது 334 சம்பவங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.








