ஷா ஆலம், செப் 20- உணவுப் பொருள்களின்
விலை மற்றும் விநியோகத்தை கண்காணிக்க
சம்பந்தப்பட்ட அமைச்சருக்குப் பிரதமர்
உத்தரவிட்டுள்ளார்.
பொருள் விலையேற்றம் என்பது மக்களின்
வாழ்க்கையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய
ஒரு கடுமையான விஷயம் என்று நிதி
அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
இது (பொருள் விலையேற்றம்)
மக்களின் வாழ்க்கையில் நெருக்குதலைத்
தரும் ஒரு கடுமையான விஷயம் என்பதை
நான் ஒப்புக்கொள்கிறேன். ஆகவே,
களமிறங்கி நிலவரத்தைக் கண்காணிக்கும்படி
சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு
உத்தரவிட்டுள்ளேன்.
உள்நாட்டுப் பொருள்களின் விலை
அதிகரிக்காது என்று நாங்கள் உத்தரவாதம்
அளித்தாலும் பல இடங்களில் விநியோகத்
தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள்
வந்துள்ளன. அவை சரியாகக் கையாளப்பட
வேண்டும் என்று மக்களவையில் இன்று
12வது மலேசியத் திட்டத்தின் மத்திய
தவணைக்கான மதிப்பாய்வு மீதான
விவாதத்தை முடித்து வைத்து
உரையாற்றும்போது போது அவர் கூறினார்.
அதே சமயம், உற்பத்தி செய்யும் நாடு
ஏற்றுமதி வரி அல்லது விநியோகங்கச்
செலவினங்களில் மாற்றங்களைச் செய்தால்
பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படும்
என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
என்று அன்வார் சொன்னார்.
உதாரணத்திற்கு வெங்காயத்தின் விலை
உயர்வைக் குறிப்பிடலாம். கடந்த ஆகஸ்டு
மாதத்திலிருந்து, இந்திய வெங்காயத்திற்கான
ஏற்றுமதி வரி 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெங்காயம்
கொள்முதல் செய்யும் நமக்கு அதாவது
மலேசியாவுக்கு இதனால் நிச்சயம் பாதிப்பு
ஏற்படும் என்றார் அவர்.
வெள்ளை அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த
கடந்த மாதம் இந்தியாவின் முடிவு எடுத்தது.
ஆகவே நாம் விநியோகம் மற்றும் தேவையின்
கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டிய
அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி
கட்டுப்படுத்தப்பட்டால் உள்ளூரில் அரிசி
விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால்
உள்நாட்டில் அரிசி விலை உயராமல் இருக்க
நாம் மானியத்தை அதிகரிப்போம் என்று
அவர் கூறினார்.








