ஷா ஆலம், செப் 20- தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும்
மாநிலத்திலுள்ள வணிகர்கள் ஐ-பிஸ்னஸ் கடனுதவித் திட்டத்திற்கு
விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர
தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரை வர்த்தக கடனுதவி
வழங்கப்படுவதாக யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் கூறியது.
இந்த ஐ-பிஸ்னஸ் திட்டத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த
வர்த்தகர்களும் பங்கேற்கலாம். மேல் விபரங்களுக்கு www.hijrahselangor.com
என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள் என தனது பேஸ்புக் பதிவில் அது
குறிப்பிட்டுள்ளது. இந்த கடனுதவிக்கான விண்ணப்பங்களை
http://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் வாயிலாகவும்
மேற்கொள்ளலாம்.
மேலும் அதிகமான தொழில்முனைவோர் பயன்பெறுவதற்கு ஏதுவாக 2023
வரவு செலவுத் திட்டத்தில் 13 கோடி வெள்ளி நிதியை மாநில அரசு
ஹிஜ்ரா அறவாரியத்திற்கு ஒதுக்கியது.
ஐ-பிஸ்னஸ் தவிர்த்து ஐ-பெர்மூசிம், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள்
ஏசான் (நாடி), ஐ-அக்ரோ, ஐ-லெஸ்தாரி மற்றும் கோ டிஜிட்டல் ஆகிய
வர்த்தக கடனுதவித் திட்டங்களையும் ஹிஜ்ரா அமல்படுத்தியுள்ளது.








