ஷா ஆலம், செப் 19 - சிலாங்கூர்
வளர்ச்சியடைந்த மாநிலமாகத் தொடர்ந்து
விளங்குவதற்கு ஏதுவாக இலக்குகளை
தீர்மானிக்க இந்த தவணையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள்
பொறுப்புகளை முடிந்தவரை சிறப்பாகச்
செய்து வருமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும்
எதிர்கால சவால்களை எதிர்கொள்ள எப்போதும் விவேகமாகவும்
புத்திசாலித்தனமாகவும் தைரியமாகவும்
இருக்க வேண்டும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
இன்று முதல் நீங்கள் அதிகாரப்பூர்வமாகச்
சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள். மாநில
அரசின் நிர்வாகம் மற்றும் மாநிலக்
கொள்கையின் திசையை நிர்ணயிக்கும்
பொறுப்பும் உங்களுடையது என்று அவர்
சொன்னார்.
எனவே, சபைக்கு எனது அறிவுரை
என்னவென்றால் பெரிய சவால்களை
எதிர்கொள்வதிலும் கொள்கைகளை
வகுப்பதிலும் மாநிலத்திற்கு நன்மை தரும்
பிரேரணைகளையும் விவாதங்களையும் முன்
வைப்போம் என்று அவர் கூறினார்.
15வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின்
முதல் தவணைக்கான முதலாவது கூட்டத்தை
(பதவிப் பிரமாணம்) ஒத்திவைக்கும்
பிரேரணையின் போது அவர் இதனைத்
தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மாநில சட்டமன்ற
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கும்
அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொண்டார்.
மாநில சட்டமன்றம் சீராக இயங்கும் என்று
நாங்கள் நம்புகிறோம். பதவியேற்ற அனைத்து
உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள்
என்று இன்று காலை பதவியேற்பு விழாவிற்குத்
தலைமை தாங்கிய பின் கூறினார்.
முன்னதாக, முன்னாள் பந்திங் சட்டமன்ற
உறுப்பினர் லாவ் வேங் சான் சபாநாயகராக
நியமிக்கப்பட்டார். புக்கிட் அந்தராபங்சா
உறுப்பினர் முகமது கம்ரி கமாருடின் துணை
சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.








