ஷா ஆலம், செப் 19- பள்ளிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதில் குறிப்பாக கழிப்பறை பராமரிப்பு பணிகளுக்கு நிதி
ஒதுக்கீடு வழங்குவதில் அரசின் முழு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பகுதி
உதவி பெறும் பள்ளிகளுக்கும் இடையே வேறுபாடு நிலவுவதாக
வெளிவந்த புகார் மீது உரிய கவனம் செலுத்த கல்வியமைச்சர் ஃபாட்லினா
சீடேக் வாக்குறுதியளித்துள்ளதாக கோல சிலாங்கூர் தொகுதி பி.கே.ஆர்.
தலைவர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
பகுதி உதவிப் பெறும் பள்ளிகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் உதவி
வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளதோடு
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி உதவி பெறும் பள்ளிகளுக்கு (பந்துவான்
மோடால்) நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டு விட்டதாகவும் அண்மையில்
நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் குறிப்பிட்டதாக அவர் சொன்னார்.
மொழி வேறுபாடின்றி மோசமான நிலையிலுள்ள அனைத்துப் பள்ளிகள்
விஷயத்தில் உரிய கவனம் செலுத்தும்படி அமைச்சின் அதிகாரிகளுக்கு
தாம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நடப்புத் தேவையின் அடிப்படையில் அனைத்து மொழி பள்ளிகளுக்கும்
கல்வியமைச்சு உதவிகளையும் மானியத்தையும் வழங்கி வருகிறது.
எனினும், நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பகுதி உதவிப் பெறும்
பள்ளிகளுக்கான நடைமுறை சற்று மாறுபட்டது. பள்ளி நிலம் மற்றும்
சொத்துகளை பள்ளி மேலாளர் வாரியங்களே நிர்வகிக்கும் காரணத்தால்
அந்த மானியம் அந்த வாரியத்திடமே ஒப்படைக்கப்படுகிறது என்று டாக்டர்
ஜலிஹா எங்களிடம் விளக்கினார்.
உடனடி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில்
பள்ளிகள் இருந்தால் அது குறித்து கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக
அமைச்சு மற்றும் தமது கவனத்திற்கு கொண்டு வரும்படியும் அவர்
கேட்டுக் கொண்டார்.
இது தவிர பகுதி உதவிப் பெறும் பள்ளிகளை முழு உதவிப் பெறும்
பள்ளிகளாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட பள்ளி
நிர்வாகங்களிடமிருந்து தாம் வரவேற்பதாகவும் இந்த மூலம் பகுதி உதவிப்
பெறும் பள்ளிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண
முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார் என்று தீபன்
குறிப்பிட்டார்.
பள்ளிகளில் மிகவும் மோசமான நிலையிலுள்ள கழிப்பறைகளை
சீரமைப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் தலா 70,000 வெள்ளி
வழங்கப்படும் என கல்வியமைச்சர் அறிவித்திருந்த நிலையில்
அத்திட்டத்தில் பகுதி உதவிப் பெறும் தமிழ்ப்பள்ளிகள் விடுபட்டது
தொடர்பில் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும்
பள்ளி மேலாளர் வாரியங்கள் வெளியிட்ட மனக்குறைகளை இந்த
சந்திப்பின் போது அமைச்சர் ஜலிஹாவின் கவனத்திற்கு தாம் கொண்டுச்
சென்றதாக தீபன் கூறினார்.








