ஷா ஆலம், செப்டம்பர் 18: பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமைக்காக அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல் வரை அரசியல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தேசிய ஒற்றுமை கவுன்சில் உறுப்பினர் பரிந்துரைத்தார்.
அரசியலில் விளையாடுவதற்குப் பதிலாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை இரு தரப்பினரும் வலுப் படுத்துவதை உறுதி செய்வதே அப் பரிந்துரையின் நோக்கமாகும் என பேராசிரியர் டத்தோ டாக்டர் சிவமுருகன் பாண்டியன் தெரிவித்தார்.
“அரசியல் நல்லிணக்கம் செய்யப்பட வேண்டும், இதனால் இரு தரப்பும் தேசியப் பிரச்சனைகளையும் மக்களின் நலன்களையும் தீர்ப்பதில் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியும்.
"டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்தபோது போர் நிறுத்தம் செய்யப்பட்டது, அது மீண்டும் முன்மொழியப்படலாம்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
முன்னதாக, தேசிய ஸ்திரத்தன்மைக்காகப் பொதுத் தேர்தல் (ஜிஇ) வரை அத்தடையை அமல்படுத்த வேண்டும் என்று பயான் பாரு சிம் தி ஜின் நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைத்தார்.
பொதுத் தேர்தல் முடிந்து 10 மாதங்களாகியும் நாட்டின் அரசியல் பிரச்சனை இன்னும் குறையவில்லை, மேலும் சில கட்சிகள் அரசு இனம் மற்றும் மதம் என்ற 3R பிரச்சனையை கூட அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துகின்றன.
சிலாங்கூர் மாட்சிமை மிக்க சுல்தான் கடந்த வாரம் தனது உத்தரவில் அரசியல் தலைவர்கள் மதத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மக்களின் ஆதரவைப் பெற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நாட்டில் உள்ள மக்களின் ஒற்றுமையைக் காக்க, பொறுப்பற்ற முறையில் ஃபத்வா வழங்கும் செயலையும் நிறுத்த வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா அல்ஹாஜ் வலியுறுத்தினார்.
நாட்டின் நல்வாழ்வுக்காகப் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த சமூகங்களில் நெருக்கமான ஒற்றுமை உணர்வை தலைவர்கள் விதைத்து வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.








