ஷா ஆலம், செப் 18- வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக
2022/2023 வடகிழக்கு பருவமழை
(எம்.டி.எல்.) பேரிடர் உதவி நிதியின்
வாயிலாக மொத்தம் 52 கோடியே 10 லட்சம்
வெள்ளி அனைத்து மாநிலங்களுக்கும்
விநியோகிக்கப்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமும்
(நட்மா) ஒவ்வொரு
மாநிலத்திற்கும் தலா 90 லட்சத்து 10 ஆயிரம்
வெள்ளியை பேரிடர் தயார் நிலை
நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு
செய்துள்ளதாக சபா, சரவாக் விவகாரங்கள்
மற்றும் சிறப்பு பணிகளுக்கான பிரதமர் துறை
அமைச்சர் கூறினார்.
அடிப்படை ஒதுக்கீட்டை மாநில அரசுகளுக்கு
நாங்கள் வழங்கியுள்ளோம். அந்த
ஒதுக்கீட்டை அம்மாநிலங்கள்
பயன்படுத்திக்கொள்ளலாம். இது போதாது
என்றால் நீங்கள் நட்மாவிடம் மேலும்
கேட்கலாம் என்று டத்தோ அர்மிசான் அலி
இன்று மக்களவையில் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின்
பட்டியலை இனி நட்மா அங்கீகரிக்காது
என்றும் மாறாக, மாவட்ட பேரிடர்
ஆணையம் அதற்கு பொறுப்பேற்கும்
என்றும் பாப்பர் நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
ஒரு மாவட்டம் பேரிடர் பகுதியாக
பிரகடனப்படுத்தப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட
மாநிலங்கள் ஒதுக்கப்பட்ட அந்த நிதியை
விநியோகிக்க முடியும் என அவர்
தெளிவுபடுத்தினார்.
இது முக்கியமானது. ஏனெனில், மாநிலத்திற்கு
அதிகாரத்தை கொடுத்துள்ளோம். அதிக
நிர்வாக நடைமுறைகளையும்
பாதிக்கப்பட்டவர்கள் அதிக பாரங்களைப்
பூர்த்தி செய்வதையும் காண விரும்பவில்லை.
மக்கள் சிரமப்படாமல் இருப்பதையும்
விடுபடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதி
செய்ய விரும்புகிறோம் என்று அவர்
கூறினார்.
2020 முதல் 2022 வரையிலான
காலக்கட்டத்தில் பேரிடர்களில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 96
கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி
வழங்கப்பட்டதாக
துணை அமைச்சர் டத்தோ வில்சன் உங்காக்
கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.








