ஷா ஆலம், செப் 18- சாலைத் தடுப்புச்
சோதனையின் போது சாலைப்
போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே)
அமலாக்க அதிகாரியை மோதிய மோட்டார்
சைக்கிளோட்டி ஒருவர் இன்று தொடங்கி
நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.
இருபத்தைந்து வயதான அந்த ஆடவருக்கு
எதிரான தடுப்புக் காவல் அனுமதியை
மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி
வழங்கியதாக பெரித்தா
ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று காலை 11.00 மணியளவில் சிரம்பான்-
போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28வது
கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்த சம்பவம் சமூக
ஊடகங்களில் பரவலாக வைரலானது.
இச்சம்பவத்தில் யமாஹா ரக மோட்டார்
சைக்கிளை ஓட்டிச் சென்ற சந்தேக நபர்
சாலைத் தடுப்பை மீறிச் சென்றதோடு
ஜே.பி.ஜே. அதிகாரி முகமது நூர்ஹக்கிம்
முகமது ரசீபையும் மோதித் தள்ளினார்.
சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக
நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சாலை
வரி காலாவதியான நிலையிலும்
வாகனமோட்டும் லைசென்ஸ் இன்றியும்
மோட்டார் சைக்கிளை செலுத்தியது கண்டு
பிடிக்கப்பட்டது. மேலும் போதைப்பொருள்
உள்ளிட்ட எட்டு குற்றப்பதிவுகளையும்
அவ்வாடவர் கொண்டுள்ளார்.
குற்றவியல் பலாத்காரத்தை பயன்படுத்தி
அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல்
தடுத்ததாக குற்றவியல் சட்டத்தின பிரிவு
353ன் கீழ் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது.








