கிள்ளான், செப் 18- வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஆசியாவின் தலைசிறந்த
நீர் சேவை வழங்குநராக விளங்கும் இலக்கை அடைய பெருங்குசான்
ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.
இந்நோக்கத்திற்காக வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் வருமானம்
ஈட்டித்தராத நீரின் அளவை 25 விழுக்காடாக குறைப்பதில் தாங்கள்
முனைப்பு காட்டி வருவதாக அதன் இடைக்கால தலைமைச் செயல்முறை
அதிகாரி அபாஸ் அப்துல்லா கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் 33.3 விழுக்காடாக இருந்த வருமானம் ஈட்டித்
தராத நீரின் அளவு கடந்தாண்டில் 27.8 விழுக்காடாக
குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பயனீட்டாளர்களின் தேவையை ஈடு செய்வதற்காக நீரின் கையிருப்பை
அதிகரிப்பது, பழைய குழாய்களை மாற்றுவது, மேலும் அதிகமான நீர்
சுத்திகரிப்பு மையங்களை நிர்மாணிப்பது ஆகிய திட்டங்களை
அமல்படுத்துவதையும் தாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
சுமார் 6,000 கிலோ மீட்டர் தொலைவிலான பழைய மற்றும் மோசமான
நிலையிலுள்ள குழாய்களை மாற்றுவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு
வருகிறோம். இது அதிக செலவினத்தை உள்ளடக்கியதால் இத்திட்டத்தை
கட்டங் கட்டமாக மேற்கொள்ளவிருக்கிறோம் என அவர் சொன்னார்.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி
நேற்று இங்குள்ள புக்கிட் ராஜா ஏயோன் பேரங்காடியில் நடைபெற்ற
ஹைட்ரோ ஃபேமில் ஒன் வீல்ஸ் எனும் கண்காட்சியில் உரையாற்றும்
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 650 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்களை
மாற்றியது மற்றும் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தை
நிர்மாணித்தது ஆகியவை தங்களின் சாதனையாக விளங்குகிறது என
அவர் குறிப்பிட்டார்.








