ஷா ஆலம், செப் 17: எதிர்காலத்தில் சிலாங்கூர் அனாக் இஸ்திமேவா மையம் (அனிஸ்) மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று சமூக நலத்துறை பொறுப்பு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் முன்மொழியப்படும் என்றும், அடுத்த ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் எனவும் நம்புவதாக அன்பால் சாரி கூறினார்.
"சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) மற்றும் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஆகியவற்றுடன் இணைந்து அவர்களின் வளாகத்தை ஒரு தலையீட்டு மையமாகப் பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
"கிராமப்புறங்களில் பல மையங்களைத் திறப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இதன் வழி, பெற்றோர்கள் தங்கள் சிறப்புக் குழந்தைகளைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதை எளிதாக்க இயலும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
சிறப்புக் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பான கல்வியை வழங்கும் பல ஏஜென்சிகள் அல்லது நிறுவனங்களுடனும் தனது தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று அன்பால் கூறினார்.
"இந்த சிறப்பு குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அல்லது சிகிச்சையாளர்களைக் கண்டறிவதே இப்போது எங்களின் சவால்.
" பல ஏஜென்சிகள் அல்லது நிறுவனங்களுடன் இணைந்து இந்த குழந்தைகளுக்கு வழிகாட்டக்கூடிய திறமையான ஆசிரியர்களை நாங்கள் கண்டுபிடிப்போம்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆதரவு சேவைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மாநில அரசு பெரிய அளவிலான ஒதுக்கீடுகளை வழங்குகிறது.
அதில் பாலர் மையத்தின் சிறப்பு உதவி சிகிச்சை மற்றும் கல்விக்கான செலவும் உள்ளடங்கும்.








