கோல சிலாங்கூர், செப் 15- நிச்சயமற்ற வானிலையைக் கருத்தில்
கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர் இறைப்பு பம்ப்கள் மற்றும்
மதகுகள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதைக் கண்டறிய
தொடர்ச்சியாகச் சோதனை நடத்தப்படும்.
மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டத்தின் (செஜாம்) கீழ் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதை
சுட்டிக் காட்டிய அவர், பருவ மழையின் போது மட்டுமல்லாது மழைப்
பருவத்திற்கு அப்பாற்பட்ட காலங்களிலும் இந்த கண்காணிப்பு பணிகள்
மேற்கொள்ளப்படும் என்றார்.
நீர் இறைப்பு பம்ப்களும் மதகுகளும் செயல்படும் நிலையில் இருக்க
வேண்டும். அதே சமயம், வடிகால்கள், கால்வாய்கள், ஆறுகள்
ஆகியவற்றைப் பராமரிக்கும் பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு
வருகிறோம். நிச்சயமற்ற வானிலையை எதிர்கொள்ளும் விதமாக
இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.
நீர் பெருக்கு ஏற்படும் எந்த இடத்திலும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 20
கையடக்க நீர் இறைப்பு பம்ப்களும் எங்களிடம் உள்ளன. இந்த பம்ப்கள்
மதகுகளுக்கு அருகில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்று அவர்
மேலும் தெரிவித்தார்.
இங்குள்ள கோல சிலாங்கூர் விவசாய இலாகாவில் நேற்று நடைபெற்ற
2023 சிலாங்கூர் விவசாய புத்தாக்க தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே, தற்போது மேற்கொள்ளப்படும் ஆண்டுக்கு இரு பருவ நெல்
பயிரீட்டுக்கு பதிலாக ஆண்டுக்கு ஐந்து பருவ நெல் பயிரீட்டு முறையை அமல்படுத்தும் பரிந்துரை குறித்து கருத்துரைத்த ஹிஷாம், இது குறித்து விவசாய இலாகா, இயாடா எனப்படும் ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுப் பகுதி ஆகிய தரப்பினருடன் தாங்கள் விவாதித்து வருவதாகச் சொன்னார்.








