ஷா ஆலம், செப் 14- குறைந்த கல்விக் கட்டணம் காரணமாக சிலாங்கூர்
பல்கலைக்கழகத்தில் (யுனிசெல்) குறைந்த வருமானம் பி40 தரப்பைச்
சேரந்த 60 விழுக்காட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்குரிய வாய்ப்பு
கிட்டியுள்ளது.
இந்த கல்விக் கட்டண சலுகை காரணமாக உயர்கல்விக் கூடங்களில்
கல்வியைத் தொடர்வதற்குரிய விரிவான வாய்ப்பு மாணவர்களுக்கு
கிட்டியுள்ளது என்று அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர்
டத்தோ டாக்டர் முகமது ரிட்சுவான் ஓத்மான் கூறினார்.
வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் மாணவர்களின்
சிறப்பான அடைவு நிலைக்கு முன்னுரிமை அளித்து வரும் உயர்கல்விக்
கூடம் என்ற முறையில் யுனிசெல் கல்விக் கட்டணம், தங்கும் விடுதி
கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்களை மிகவும் குறைவான விகிதத்தில்
நிர்ணயித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் கல்வி வாய்ப்பினைப்
பெறுவதற்குரிய சாத்தியத்தை இந்த அணுகுமுறை வழங்குகிறது என்று
நேற்றிரவு இங்கு நடைபெற்ற யுனிசெல் அறவாரியத்தின் (யுசெல்) விருந்து
நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
இந்த யுசெல் அறவாரியம் குறித்து விளக்கமளித்த யுனிசெல்
தலைவருமான அவர், நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவும்
நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்து என்றார்.
இது தவிர, யுனிசெல் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு ஏதுவாக
பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த அறவாரியத்தின்
பங்களிப்பு தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விருந்து நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்
அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா அஜிசா
ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.








