ஷா ஆலம், செப் 14- கிளானா ஜெயா எல்.ஆர்.டி. தடத்தில் பரபரப்பான
நேரங்களில் இரயில் சேவைக்கான பயண இடைவெளியை மூன்று
நிமிடங்களாக குறைக்கும் இலக்கு அடுத்தாண்டில் அடையப்படும்.
அந்த தடத்தில் மூன்று புதிய இரயில்கள் பயணச் சேவையில்
ஈடுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அங்கு பரபரப்பான நேரங்களில்
பயண இடைவெளி 3.8 நிமிடங்களாக உள்ளது என்று போக்குவரத்து
அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
சுமார் 172 கோடி வெள்ளி செலவில் 27 இரயில்களை தருவிக்கும்
கோலாலம்பூர் கூடுதல் வாகனத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட இரயில்களில்
மூன்று கிளானா ஜெயா தடத்தில் பயன்படுத்தப்படுவதாக அவர்
சொன்னார்.
கடந்த 2020 செப்டம்பர் தொடங்கி இதுவரை 11 இரயில்கள்
பெறப்பட்டுள்ளன. எஞ்சிய 16 இரயில்கள் இம்மாதம் தொடங்கி வரும் 2024
வரை கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போது சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ள 44 இரயில்கள் மூலம்
பரபரப்பான நேரங்களில் பயண இடைவெளியை 3.8 நிமிடங்களாகக்
குறைத்துள்ளோம். அடுத்தாண்டில் கூடுதலாக இரயில்கள் சேவையில்
ஈடுபடுத்தப்படும் பட்சத்தில் பயண இடைவெளி 3 நிமிடங்களாக
குறைக்கப்படும் என்றார் அவர்.
இது தவிர, கூடுதல் இரயில்களின் வாயிலாக பரபரப்பான நேரங்களில்
இரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் 100 விழுக்காடாக
குறைக்கப்படும். தற்போது 125 விழுக்காட்டினர் வரை பயணம் செய்து
வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
கூடுதல் இரயில் சேவையின் மூலம் தற்போது தினசரி 250,000 பேராக
இருக்கும் பயணிகள் எண்ணிக்கையை 300,00 ஆக உயர்த்தவும் தற்போது
அடிக்கடி ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப பிரச்சனைகளைக் குறைக்கவும்
இயலும் என அவர் கூறினார்.








