ஷா ஆலம், செப் 14- வரும் 2025ஆம் ஆண்டை சிலாங்கூருக்கு வருகை
தாருங்கள் ஆண்டாக பிரகனப்படுத்தும் நடவடிக்கை மாநிலத்தில்
சுற்றுப்பயணிகள் வருகை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும் என்று சுற்றுலாத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
அந்த ஆண்டில் மாநிலத்திற்கு வருகை புரியும் சுற்றுப் பயணிகள்
எண்ணிக்கை ஐந்து முதல் பத்து விழுக்காடு வரை அதிகரிக்கும்
என்பதோடு இதன் மூலம் சிலாங்கூரை நாட்டின் முதன்மை சுற்றுலா
மையமாக தொடர்ந்து நிலை நிறுத்த முடியும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரின் அழகையும் இங்குள்ள சுற்றுலா மையங்களையும்
பிரபலப்படுத்துவதற்கான வழிகளில் ஒன்றாக சிலாங்கூருக்கு வருகை
தாருங்கள் ஆண்டு விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள பல்வேறு சுற்றுலா மையங்கள் மற்றும் ஊக்குவிப்புச்
சலுகைகள் மேலும் அதிகமானோரை சிலாங்கூர் மாநிலத்திற்கு ஈர்க்கும்.
அதிகமான சுற்றுப்பயணிகள் மாநிலத்திற்கு வர வேண்டும் என்பதே நமது
நோக்கமாக உள்ளது என்றார் அவர்.
அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை புரிந்த மாநிலமாக சிலாங்கூர்
விளங்குகிறது. சிறந்த சுற்றுலா மையம் என்ற பெயரைத் தக்க வைத்துக்
கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.
கடத்தாண்டு சிலாங்கூருக்கு 2 கோடியே 20 லட்சம் உள்நாட்டுச்
சுற்றுப்பயணிகள் வருகை புரிந்ததை மலேசிய புள்ளி விபரத் துறை கடந்த
ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.








