ஷா ஆலம், செப் 13- சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் முயற்சியின்
ஒரு பகுதியாக வரும் 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள்
ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்படும்.
மத்திய அரசை விட முன்கூட்டியே இந்த நிகழ்வை நடத்தும் தங்களின்
முயற்சிக்கு டூரிசம் சிலாங்கூருடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பின் போது
ஒப்புதல் பெறப்பட்டது என்று சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
மாநிலத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான நோக்கம் குறித்து
அந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் நான் எடுத்துரைத்தேன். இதற்கான பணி
இலக்கு அடுத்த ஆண்டில் வரையப்படும். இந்த கூட்டத்தில் 2025ஆம்
ஆண்டை சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டாகப்
பிரகடனப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இணக்கம்
காணப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தை சிலாங்கூர் முன்கூட்டியே நடத்தவுள்ள நிலையில்
இதற்கான ஏற்பாடுகள் அடுத்தாண்டில் மேற்கொள்ளப்படும். நமது
மாநிலத்தில் ஒப்பற்ற பல சுற்றுலா மையங்கள் உள்ளன என்று அவர்
சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.
வேளாண் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா தொகுப்பைத்
தாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறிய அவர், மூன்று பகல், இரண்டு
இரவுகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாத் திட்டம் மாநிலத்தின்
வடபகுதியில் அமல்படுத்தப்படும் என்றார்.








