செய்தி: ராஜா
ஷா ஆலம், செப் 12- பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மத்திய தவணைக்கான மதிப்பாய்வில் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நீடித்த, சுபிட்சம் நிறைந்த மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடு எனும் இலக்கை மலேசியா அடைவதற்காக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள துறைகளில் சுகாதாரத் துறையும் ஒன்றாக விளங்குவதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுகாதாரத் துறையின் சீர்திருத்தத்திற்கான இலக்காக விளங்கும் சுகாதார வெள்ளை அறிக்கைக்கு ஏற்ப சுகாதாரத் துறையின் மேம்பாட்டை உறுதி செய்வதில் தெளிவான கடப்பாட்டை 12வது மலேசியத் திட்டத்தின் மத்திய தவணைக்கான மதிப்பாய்வு தாக்கலின் போது வெளிப்படுத்தியமைக்காக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
சுகாதாரச் சேவையின் தரம் மற்றும் அதனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு அடையாளம் காணப் பட்ட பிரதான திட்டங்களையும் அமைச்சர் ஜலிஹா பட்டியலிட்டார்.
1. பழுதடைந்த சுகாதார கிளினிக்குகள் நவீனமயமாக்குதல் - 2023-2025ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மோசமான நிலையிலுள்ள 1,200 சுகாதார கிளினிக்குகள் தரம் உயர்த்தப்படும். – தரமான அடிப்படை சுகாதாரச் சேவை அனைவருக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
2. சுல்தானா அமினா மருத்துவமனை மறுசீரமைப்பு - சுல்தானா அமினா மருத்துவமனையின் முதல் கட்ட புனரமைப்புப் பணிகள் வெ.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். நோயாளிகள் நெரிசல் குறைக்கப் படும் மற்றும் மருத்துவச் சேவைத் திறன் அதிகரிக்கப்படும்.
3. உயர் தொழில்நுட்ப சுகாதார உபகரணங்கள் - சிறப்பான மருத்துவச் சேவை வழங்குவதற்கு அதிநவீன மருத்துவ சாதன வாடகைத் திட்டம் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும். -மருத்துவமனைகளும் கிளினிக்குகளும் உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்படும்.
4. மின்னியல் மருத்துவ பதிவு முறை - மின்னியல் மருத்துவ பதிவு முறையை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும். மருத்துவ பதிவுகளை பகிரும் முறை முறையாகவும் மக்கள் நட்புறவாகவும் மேற்கொள்ளப்படும்.
5. விரிவான சுகாதாரப் பாதுகாப்பு - வசதி குறைந்த தரப்பினருக்கு உதவும் வகையில் மடாணி மருத்துவத் திட்டம் விரிவுபடுத்தப்படும் - சுகாதார பாதுகாப்பு வரம்பு அதிகரிக்கப்படும்.
6. மனநல சுகாதாரக் கழகம் - மனநல சுகாதார பிரச்சனைகளை ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கு ஏதுவாக மனநல சுகாதாரக் கழகம் உருவாக்கப்படும். –அரசாங்கம், தனியார் துறை மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மத்திய தவணைக்கான மதிப்பாய்வில் வரையறுக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் யாவும் திட்டமிட்டபடி சிறப்பான முறையில் அமல் செய்யப்படுவதை சுகாதார அமைச்சு உறுதி செய்யும் என்றும் டாக்டர் ஜலிஹா தெரிவித்தார்.








