ஷா ஆலம், செப்டம்பர் 13: கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஜெராமின் ஜாலான் பாகன் சுங்கை ஜங்குட் என்ற இடத்தில் பெண் ஒருவர் தனது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப் பட்டதால் இறந்து விட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது என கோலா சிலாங்கூர் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ரம்லி காசா தெரிவித்தார்.
சுயநினைவின்றி மாலை 4 மணியளவில் இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய பெண் ஒருவரைப் பற்றி உதவி மருத்துவ அதிகாரியிடமிருந்து காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது என்றார்.
“பாதிக்கப்பட்டவரின் உடலில் காயம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது,`` என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தகவலைத் தொடர்ந்து, அடுத்த நாள் சந்தேக நபரான பாதிக்கப்பட்ட பெண்ணின் 35 வயது கணவனைக் காவல் துறைவினர் கைது செய்தனர். அந்நபர் செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக ரம்லி காசா கூறினார்.
"சந்தேக நபர் கொலைக்கான தண்டனை சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்ட படுவதற்காக இன்று கோலா சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்" என்று அவர் கூறினார்.
– பெர்னாமா








