புக்கிட் மெர்தாஜம், செப் 12- இங்குள்ள அம்பாங் ஜாஜார் குப்பை அழிப்பு
மையத்தில் கையெறி குண்டு ஒன்று நேற்று கண்டு பிடிக்கப்பட்டது.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவரின் கண்ணில் அந்த
கையெறி குண்டு தென்பட்டதைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல்
கொடுக்கப்பட்டதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி டான் செங் சான் கூறினார்.
அந்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று பிற்பகல்
1.30 மணியளவில் கிடைத்த புகாரின் பேரில் போலீஸ் குழுவொன்று
அவ்விடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த குப்பை அழிப்பு மையம் மேடான மற்றும் சுற்றிலும் வேலியிடப்பட்ட
பகுதியில் அமைந்துள்ளதாக கூறிய அவர், கையெறி குண்டு என
சந்தேகிக்கப்படும் அப்பொருள் துரு பிடித்த நிலையில் காணப்பட்டாலும்
அது செயல்படும் தன்மையைக் கொண்டிருந்தது என்றார்.
இதனைத் தொடர்ந்து பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்திலிருந்து
வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அழைக்கப்பட்டனர். அப்பிரிவினர் சம்பவ
இடத்தில் சோதனை மேற்கொண்டு அந்த கையெறி குண்டை அழிக்கும்
பணியில் ஈடுபட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த கையெறி குண்டு கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் போலீசார்
தொடர் விசாரணையை நடத்தி வருவதாக அவர் மேலும் சொன்னார்.








