சுபாங் ஜெயா, செப் 11- இங்குள்ள பைத்துலமின் பள்ளிவாசல் வளாகத்தில்
இன்று நடைபெற்ற மாநில அரசின் ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொது
மக்களின் அமோக வரவேற்பு காரணமாக இங்கு விற்பனைக்கு
வைக்கப்பட்ட பொருள்கள் இரண்டு மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்தன.
முட்டை, அரிசி மற்றும் மீன் ஆகியவை இந்த விற்பனையில் கலந்து
கொண்டவர்களின் பிரதான தேர்வாக இருந்ததாக சிலாங்கூர் மாநில
விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) அதிகாரி முகமது ஃபாரிட்
முஸ்தாபா கூறினார்.
வழக்கம் போல் 500 கோழிகள், 200 தட்டு முட்டைகள், 72 போத்தல்
சமையல் எண்ணெய், 200 பேக் அரிசி, 200 பேக் மீன் ஆகியவற்றை
விற்பனைக்கு வைத்திருந்தோம் என்று அவர் தெரிவித்தார்.
இங்கு விற்கப்படும் பொருள்கள் தரமானவையாகவும் விலை மலிவாகவும்
உள்ளதால் தாம் அடிக்கடி மலிவு விற்பனைகளில் கலந்து கொள்வதாகக்
குடும்ப மாதான வான் வூ ஃபோங் (வயது 42) கூறினார்.
மீண்டும் ஒரு முறை இந்த விற்பனையில் பங்கேற்று கோழி, மீன்,
முட்டை போன்ற பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிடைத்தது
குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் நிறுவன ஊழியரான திரேசா சுவா (வயது 45) என்ற மாதுவும்
இந்த மலிவு விற்பனையில் பங்கேற்கும் வாய்ப்பினை நழுவ விடவில்லை.
நான் பல முறை இத்தகைய மலிவு விற்பனைகளில் கலந்து
கொண்டுள்ளேன். இம்முறை அதிர்ஷ்டவசமாக எனது அலுவலகத்திற்கு
அருகே இந்த மலிவு விற்பனை நடைபெறுகிறது. அலுவலகத்தில் சிறிது
நேர அவகாசம் கேட்டு பொருள்கள் வாங்க இங்கு வந்தேன் என்றார் அவர்.
இதனிடையே, மேலும் அதிகமான மக்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக
இந்த விற்பனைத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்
என்று ரஸிமான் அஹ்மார் (வயது 35) கேட்டுக் கொண்டார்.








