ஷா ஆலம், செப் 11- கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற மாநிலத்
தேர்தலில் கோத்தா கெமுனிங் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளரின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தேர்தல் பணியாளர்கள்
மற்றும் தன்னார்வலர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக விருந்து
நிகழ்வொன்று நடத்தப்பட்டது.
ஷா ஆலம், செக்சன் 28, எம்.பி.எஸ்.ஏ. கெனாங்கா மண்டபத்தில் இம்மாதம்
8ஆம் தேதி நடைபெற்ற இந்த நன்றி நவிலும் நிகழ்வுக்கு தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பி.கே.ஆர். ஜசெக, அமானா,
தேசிய முன்னணி பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரகாஷ், தேர்தலில் கோத்தா கெமுனிங்
தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடுமையாகப் பாடுபட்ட
மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள், கிராமத்
தலைவர்கள், பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணி
கட்சிகளின் தலைவர்கள் உள்பட அனைவருக்கும் தாம் நன்றி தெரிவித்துக்
கொள்வதாக தெரிவித்தார்.
கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 24,288
வாக்குகள் பெரும்பான்மையில் கோத்தா கெமுனிங் தொகுதியை பிரகாஷ்
கைப்பற்றினார். அவருக்கு 41,254 வாக்குகள் கிடைத்த வேளையில்
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் சியு ஜி காங்கிற்கு 16,966 வாக்குகளும்
பி.ஆர்.எம். கட்சி வேட்பாளர் சேகு சேகருக்கு 651 வாக்குகளும் கிடைத்தன.








