ஷா ஆலம், செப் 10- எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வான்
கண்காட்சியை (எஸ்.ஏ.எஸ்.) சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக
விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த இடமாற்றம் தொடர்பில் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட்
நிறுவனத்துடன் (எம்.ஏ.எச்.பி.) பேச்சு நடத்தப்படும் என்று முதலீடு மற்றும்
வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இந்த கண்காட்சியை சிப்பாங்கில் நடத்துவதற்கு மாநில அரசு
திட்டமிட்டுள்ளதாகவும் இதன் தொடர்பில் மலேசியா ஏர்போர்ட்ஸ்
பெர்ஹாட் நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்படும் என்றும் 2023ஆம்
ஆண்டிற்கான சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியை கடந்த 7ஆம்
தேதி தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு கால அவகாசம்
தேவைப்படும் என்பதால் இந்த இடமாற்றத்தை அடுத்தாண்டில்
மேற்கொள்வதற்கு சாத்தியமில்லை. ஆகவே, வரும் 2025ஆம் ஆண்டில்
விரிவான இடத்தில் (கே.எல்.ஐ.ஏ.) இந்த கண்காட்சியை நடத்த இலக்கு
நிர்ணயித்துள்ளோம் என்று இங் தெரிவித்தார்.
இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங், ஸ்கைபார்க் பிராந்திய வான்
போக்குவரத்து மையத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஏ.எஸ். 2023
கண்காட்சியின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே, இந்த கண்காட்சி தொடர்பில் இதன்
பங்கேற்பாளர்களிடமிருந்து தாங்கள் பரவலாக நேர்மறையான
விமர்சனங்களைப் பெற்றதாக அவர் தெரிவித்தார். அடுத்து வரும்
ஆண்டுகளில் பெரிய இடத்தில் இந்த கண்காட்சியை நடத்தும்படி அவர்கள்
கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இட நெருக்கடி எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆகவே
இதனை நாங்கள் கருத்தில் கொண்டு இக்காட்சியை தரம்
உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார் அவர்.








