புத்ரா ஜெயா செப் 8- நாட்டில் உள்ள இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
அமைச்சரவையின் இந்த இனிப்பான செய்தி மூலம் 14 ஆண்டுகளாக பரிதவித்த இந்திய பாரம்பரிய தொழில் துறையினருக்கு புதிய விடிவுகாலம் பிறந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று காலையில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர் வேலை செய்வதற்கு அனுமதி பெறும் வகையில் அறிக்கையை தாக்கல் செய்தேன்.
ஏற்கனவே உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு முழு அனுமதியை பெற்று விட்டேன்.
கடந்த ஒன்பது மாதங்களாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இந்திய பாரம்பரிய தொழில் துறையினருக்கு அனுமதி பெற்றுத் தர போராடினேன்.
இந்நிலையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்து முழு அனுமதியை பெற்றதாக அவர் சொன்னார்.
இந்த அருமையான தருணத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இந்த மூன்று துறைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை நீக்கி புதிய உத்தரவு பெறுவதற்கு தாம் நடத்திய போராட்டங்கள் மிகவும் சவாலாக இருந்தது.
இருப்பினும் சளைக்காமல் போராடி இந்த மூன்று துறைகளுக்கும் அனுமதியை பெற்றுத் தந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.








