ஷா ஆலம், செப் 5- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின்
ஆதரவுடன் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்)
2023ஆம் ஆண்டிற்கான இரண்டு நாள் டிக் டாக் சூப்பர் வியூகப் பயிற்சித்
திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
முதல் கட்டமாக நடத்தப்படும் இந்தப் பயிற்சி நாளை செப்டம்பர் 6 மற்றும்
7ஆம் தேதிகளில் காஜாங் ஆர்.எச்.ஆர். தங்கும் விடுதியில் காலை 8.00
மணி தொடங்கி நடைபெறும்.
இந்திய தொழில்முனைவோரை இலக்காகக் கொண்ட இந்த பயிற்சியில்
மொத்தம் 50 பேர் பங்கேற்கவுள்ளதாக சித்தம் நிர்வாகி கென்னத் சேம்
கூறினார்.
இந்த இரண்டு நாள் பயிற்சியில் டிக் டாக் என்றால் என்ன? வர்த்தகத்தில்
அந்த செயலியின் பயன்பாடு, பொருள்களை விளம்பரப்படுத்தும் முறை
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஏழு அத்தியாயங்களில் பயிற்சி
வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த பயிற்சிக்குக் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது எனக் கூறிய அவர்,
பங்கேற்பாளர்களுக்குத் தங்குமிட வசதியும் உணவும் இலவசமாக ஏற்பாடு
செய்து தரப்படும் என்றார்.
இந்த பயிற்சியில் தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படுகிறது. வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம்
உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். பயிற்சியை முடித்த
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.








