ஷா ஆலம், ஆக 29 - இந்த ஆண்டு சிலாங்கூர் வான் கண்காட்சி (எஸ்.ஏ.எஸ்.) இங்குள்ள
புக்கிட் ஜெலுத்தோங், ஸ்கைபார்க் ஆர்.ஏ.சி.யில் எதிர்வரும் செப்டம்பர் 7 முதல் 9 வரை
நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனமான இன்வெஸ்ட் சிலாங்கூர் சென். பெர்ஹாட்டின்
இலக்கையும் தாண்டி 24,000 பார்வையாளர்கள் இதில் கலந்துகொள்வர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு கலந்து கொண்ட 10,824 பார்வையாளர்களை விட
இரண்டு மடங்கு அதிகமாகும். 2021ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த
கண்காட்சி நடத்தப்பட்ட போது அதில் 4,987 பார்வையாளர்கள் கலந்து
கொண்டனர் என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ
ஹசன் அஸ்ஹாரி இட்ரிஸ் கூறினார்.
இந்த ஆண்டு வான் கண்காட்சியில் கலந்து கொள்ள பதிவு செய்தவர்களில்
20,014 பொதுமக்களும் 4,188 பேர் வர்த்தக பார்வையாளர்களாகவும் அடங்குவர்
என்று இன்று இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமையகத்தில் மாநில அரசின் வருடாந்திர
விமானக் காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர்
தெரிவித்தார்.
கண்காட்சி இடத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த கண்காட்சியில்
பங்கேற்பதற்கான பதிவை முன்கூட்டியே நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டதாகக் கூறிய அவர், வர்த்தக வருகையாளர்களுக்கு முதல் இரண்டு
நாட்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்படும் வேளையில் மூன்றாவது நாள்
பொது மக்களுக்கு திறந்து விடப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 117 கண்காட்சியாளர்களும் பங்கேற்பாளர்களும்
கலந்து கொள்ளவுள்ளனர். இதில் 41 விமானங்ள் காட்சிக்கு வைக்கப்படும்.
மேலும் கண்காட்சி மையத்திலும் விமானங்கள் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள இடத்திலும் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
.








