ஷா ஆலம், ஆக 28- விளையாட்டுத் துறைக்கான புதிய ஆட்சிக்குழு
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நஜ்வான் ஹலிமி சிலாங்கூர்
கால்பந்து சங்க பொறுப்பாளர்களுடன் விரைவில் சந்திப்பு
நடத்தவிருக்கிறார்.
சிலாங்கூர் கால்பந்துக் குழு தொடர்ந்து வெற்றிகளை ஈட்டுவதை உறுதி
செய்யும் நோக்கில் இந்த சந்திப்பை தாம் நடத்தவுள்ளதாக நஜ்வான்
சொன்னார்.
இந்த தவணைக்காண மலேசிய கிண்ணம் மற்றும் ஏ.எப்.சி. கிண்ணம்
ஆகியவற்றை வெற்றிக் கொள்வதற்கான வியூகங்கள் மற்றும் வழி
முறைகள் குறித்து விவாதிப்பதற்காக கால்பந்து சங்க நிர்வாகிகள்,
விளையட்டாளர்கள் மற்றும் குழுவின் பயிற்றுநர் டான் செங் ஹோ
ஆகியோருடன் தாம் இச்சந்திப்பை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசிய கிண்ணம் மற்றும் ஏ.எப்.சி. கிண்ணம் ஆகியவற்றை வெல்ல
வேண்டும் என்ற கித்தா சிலாங்கூர் குறிக்கோளை அடைவதற்கு ஏதுவாக
சிலாங்கூர் குழு தொடர்ந்து திறனுடன் செயல்படுவதற்கான
வழிவகைகளையும் வியூகங்களையும் நாங்கள் ஆராயவிருக்கிறோம் என
அவர் தெரிவித்தார்.
அதே சமயம், கடந்த 2016 சுக்மா போட்டிகளில் அடைந்த சாதனையை
சிலாங்கூர் மீண்டும் அடைவதற்கான வழி வகைகளை ஆராய அனைத்து
விளையாட்டு துறைகளுடன் தொடர்புடையத் தரப்பினருடன் நான் சந்திப்பு
நடத்தவிருக்கிறேன் என்று அவர் மேலும சொன்னார்.
சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் துணை இயக்குநராகப்
பணியாற்றியதன் மூலம் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி இந்த
தவணையில் மாநில விளையாட்டுத் துறை சிறந்த அடைவு நிலையைப்
பதிவு செய்வதை தாம் உறுதி செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.








