ஷா ஆலம், ஆக 28- வரும் செப்டம்பர் மாதம் 7 முதல் 9 வரை
நடைபெறவிருக்கும் மூன்றாவது சிலாங்கூர் வான் கண்காட்சியில் 100க்கும்
மேற்பட்ட கண்காட்சியாளர்களும் விமான நிறுவனங்களும் பங்கேற்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க்,
ஜெர்மன், செக் குடியரசு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒப்புக்
கொண்டுள்ளதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ்
கூறினார்.
இம்முறை இங்கு நடத்தப்படவிருக்கும் ஆசிய வான் விளையாட்டு
மாநாட்டில் பங்கேற்க ஈரான், தாய்லாந்து, ஜப்பான், ஹாங் காங், தென்
கொரியா, இந்தோனேசியா ஐக்கிய அரபு சிற்றரச உள்ளிட்ட நாடுகளுக்கு
மலேசிய வான் விளையாட்டு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
என்றும் அவர் சொன்னார்.
‘‘இவ்வட்டாரத்தின் ஒரே வர்த்தக வான் கண்காட்சி“ எனும்
கருப்பொருளிலான இந்த நிகழ்வின் தொடக்க நாளில் 25 விமான
நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு இதனையொட்டி வான் போக்குவரத்து
துறையை விரிவாக்கும் விதமாக வேலை வாய்ப்பு கண்காட்சியும்
நடத்தப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த வான் கண்காட்சியில் வான் போக்குவரத்து துறையில் பிரசித்தி
பெற்ற நிறுவனங்களும் பங்கேற்கின்றன. வர்த்தக விமானச் சேவை
மற்றும் வான் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களோடு
விமான பழுதுபார்ப்பு மற்றும் உபரிபாக விநியோக நிறுவனங்களும் இதில்
பங்கெடுக்கவுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.
இது தவிர நேர்முகப் பேட்டியை எவ்வாறு எதிர்கொள்வது, பிறருடன்
தொடர்பு கொள்வது, கேள்விகளுக்கு பதிலளிப்பது உள்ளிட்ட அம்சங்களில்
பயிற்சியும் இந்த கண்காட்சியின் போது வழங்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.








