ஷா ஆலம், ஆக 28- சூழியல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக
இங்குள்ள் மாங்ரோவ் பாய்ண்ட் சதுப்பு நில பொழுதுபோக்கு பூங்காவை
துப்புரவு செய்யும் இயக்கத்தில் எம்.எஸ்.யு.எனப்படும் அறிவியல்
மேலாண்மைப் பல்கலைக்கழகத்தின் 185 மாணவர்கள் பங்கு கொண்டனர்.
கிள்ளான் கரையோர மாவட்ட வன இலாகாவின் ஒத்துழைப்புடன்
நடத்தப்பட்ட இந்த சமூகத் சேவைத் திட்டத்தின் மூலம் 510 கிலோ
குப்பைகள் அகற்றப்பட்டதோடு அப்பகுதியை அழகுப்படுத்தும் விதமாக 150
காண்டா மரங்களும் நடப்பட்டன.
சதுப்பு நிலக்காடுகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை
மாணவர்களுக்கு உணர்த்துவதில் இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் துணை
புரியும் என்ற கெர்பாங் மெரிடைம் சிலாங்கூர் நிறுவனம் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டது.
இந்த திட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த
நன்றிகள். குப்பைகளை அகற்றுவதிலும் மரங்களை நடுவதிலும் நீங்கள்
காட்டிய பங்களிப்பும் கடும் உழைப்பும் பெரிதும் போற்றுதலுக்குரியது என
அது கூறியது.
நீங்கள் அனைவரும் புதிய அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள் என
நம்புகிறோம். எதிர்காலத் தலைமுறைக்குத் தேவைப்படக்கூடிய சூழியல்
முறையாக விளங்கும் சதுப்பு நிலக் காடுகளை பராமரிக்கப்படுவதன்
அவசியத்தை இத்தகைய நிகழ்வுகள அனைவருக்கும் உணர்த்தும் என
நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்தது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதசாரிகளுக்கான நடை
பாதையை இந்த மாங்ரோவ் பாயிண்ட் பூங்கா கொண்டுள்ளது. கிள்ளான்
ஆற்றின் நெடுகே உள்ள சதுப்பு நிலக் காடுகளின் வனப்பை ரசிக்கும்
வாய்ப்பினை பொதுமக்களுக்கு இது வழங்குகிறது.








