உலு லங்காட், ஆக 25- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்டு 18ஆம்
தேதி வரை சட்டவிரோத குப்பை கொட்டும் மையங்களுக்கு எதிராக
காஜாங் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 142
லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட குப்பை லோரிகளின்
மதிப்பு 781,000 வெள்ளியாகும் என்று காஜாங் நகராண்மைக் கழகத்
தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.
சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகளை
முறியடிப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதை உறுதி
செய்வதற்கும் ஏதுவாக இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை
நகராண்மைக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.
நீர் மாசுபடுவது, துர்நாற்றம், ஆரோக்கியமற்றச் சுற்றுசூழல், பொது
மக்களுக்கு அசௌகர்யம் போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாக
இருக்கும் இத்தகைய சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைகளுக்கு
முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் நகராண்மைக் கழகம் தொடர்ந்து
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள மெனாரா எம்.பி.கே.ஜே.வில் காஜாங் நகராண்மைக் கழகத்தின்
மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் அவர் இதனைக் கூறினார்.
சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைகளை முறியடிப்பதில் பொது
மக்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுவதாகக் கூறிய அவர், தங்கள்
பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகளைக்
கண்டால் அது குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டார்.
பல சமயங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவோர் மிகவும்
தன்மூப்பாக நடந்து கொள்கின்றனர். பொது மக்கள் கண்களாகவும்
காதுகளாகவும் செயல்பட்டு நகராண்மைக் கழகத்திற்கு உதவினால்
இத்தகையச் சம்பவங்களை முழுமையாக முறியடிக்க முடியும் என்றார்
அவர்.








