ஷா ஆலம், ஆக 25- பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்
பொது இடங்களில் சுற்றித் திரிந்த ஆறு மாடுகள் மற்றும் ஒரு ஆடு
ஆகியவை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கையின்
போது பிடிபட்டன.
ஜெராம் மற்றும் பெஸ்தாரி ஜெயாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட
ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இந்த கால்நடைகள் பிடிபட்டதாக
நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
அனைத்துத் தரப்பினரின் குறிப்பாக சாலையைப் பயன்படுத்துவோரின்
பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.
கால்நடைகள் பொது இடங்களில் சுற்றித் திரிவதால் பொது அமைதிக்கு
ஏற்படும் பாதிப்பு மற்றும் துர்நாற்றம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து
கிடைத்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், இந்த கால்நடைகளால் வாகனமோட்டிகளுக்கு ஆபத்து ஏற்படாமலிருப்பதை
உறுதி செய்வதையும் இந்நடவடிக்கை நோக்கமாக கொண்டிருந்தது என்று
நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.
இந்நோக்கங்களின் அடிப்படையில் நாங்கள் இந்த கால்நடைகளைப் பிடித்து
அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக நகராண்மைக் கழகத்தின் கால்நடை
தடுப்பு மையத்திற்கு கொண்டுச் சென்றோம் எனவும் அது கூறியது.
இந்த கால்நடைகளை அகற்றுவதற்கும் அவற்றை சிறப்பு மையத்தில்
வைத்திருந்ததற்கும் நகராண்மைக் கழகம் நிர்ணயிக்கும் தொகையை
அக்கால்நடை உரிமையாளர்கள் செலுத்தி மீட்டுச் செல்ல வேண்டும்.
அது வரை அந்த கால்நடைகளுக்கு ஏற்படும் எந்த பாதிப்புக்கும் அதன்
உரிமையாளர்களே பொறுப்பு எனவும் நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.
அந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள்
1971ஆம் ஆண்டு மாடு-எருமை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 4(4) பிரிவின் கீழ்
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கால்நடைகளை மீட்கலாம்.








