ஷா ஆலம், ஆக 25- கிள்ளான் நகரம் விரைவில் மாநகர அந்தஸ்தைப்
பெறவுள்ளதை முன்னிட்டு நகரின் தோற்றத்தை உயர்த்தும் வகையில்
மார்க்கெட் மற்றும் பொது கழிப்பறைகளை தரம் உயரத்துவது உள்ளிட்ட 21
திட்டங்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொள்ளவுள்ளது.
இத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தேவையான 50 லட்சம் வெள்ளி
மானியத்திற்கு ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு அங்கீகாரம்
வழங்கியுள்ள நிலையில் மேம்பாட்டுப் பணிகள் அடுத்தாண்டு
தொடங்கப்படும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி
ரோஸ்லான் கூறினார்.
இந்த முன்னெடுப்பின் வாயிலாக கோலக் கிள்ளானிலுள்ள பெரிய
மார்க்கெட் 10 லட்சம் வெள்ளி செலவிலும் ஜாலான் கெராத்தாப்பி லாமா
பகுதி 10 லட்சம் வெள்ளி செலவிலும் ஜம்பத்தான் கோத்தா பாலத்தில்
பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளுக்கான தடம் 690,000 வெள்ளி
செலவிலும் தரம் உயர்த்தப்படும் என அவர் சொன்னார்.
இவை தவிர்த்து பட்டர்ஃபிளை பார்க் விளையாட்டு பூங்கா மற்றும் புக்கிட்
திங்கியில் உள்ள திடல், வலைப்பந்து திடல், பொழுது போக்கு சாதனங்கள்
மற்றும் கார் நிறுத்துமிடம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு 396,460
வெள்ளி செலவிடப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெங்காலான் பத்து தாமான் அவாமில் சுத்தமான, நறுமணமிக்க
மற்றும் வசீகரிக்கக்கூடிய தரத்திலான கழிப்பறை 220,000 வெள்ளி
செலவில் நிர்மாணிக்கப்படும். அதோடு மட்டுமின்றி 380,000 வெள்ளி
செலவில் கிள்ளானிலுள்ள பொது கழிப்பறைகள் சீரமைக்கப்படவுள்ளதோடு
13 லட்சம் வெள்ளி செலவில் பல்வேறு சிறு திட்டங்களும் அமலாக்கம்
காணவுள்ளன என்றார் அவர்.
கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் பொது மக்களின் கருத்தைப்
பெறுவதற்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை இங்குள்ள கே.எஸ்.எல்.
எக்ஸ்பிலேனேட் ஹோட்டலில் நடத்தப்பட்ட கலந்தாய்வு நிகழ்வில்
இத்திட்டங்கள் தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக நோராய்னி
சொன்னார்.
கிள்ளான் வட்டாரத்திலுள்ள சாலைகளைப் சீரமைப்பதற்கும்
பராமரிப்பதற்கும் 2 கோடியே 46 லட்சம் வெள்ளி நிதியை கிள்ளான்
நகராண்மைக் கழகம் பொதுப்பணி இலாகாவிடம் கோரியுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.








